
தேவசகாயம் துணைவியாருக்கு மாதாந்திர ஓய்வூதியம்- டத்தோஶ்ரீ சரவணன்
376 total views, 1 views today
ஈப்போ-
ஆடவர் ஒருவர் தாக்கியதில் பாதுகாவலராக பணியாற்றி வந்த தேவசகாயம் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தார்.
மரணமடைந்த தேவசகாயம் பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்ததால் பெர்கேசோ வாயிலாக 12,737 வெள்ளி அவரின் மனைவி திருமதி பிலோமினாவிடம் வழங்கப்பட்டது.
பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்ததாலும் தேவசகாயத்தின் வருமானத்தை நம்பியே குடும்பம் இருந்ததாலும் பெர்கேசோ வாயிலாக இந்த இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், இறப்பு நிதியாக 2,000 வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தேவசகாயம் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் ஓய்வூதிய நிதியாக மாதந்தோறும் 1,143 வெள்ளி திருமதி பிலோமினாவுக்கு வழங்கப்படும் என்று தேவசகாயத்தின் வீட்டிற்கு நேரடி வருகை புரிந்து ஆறுதல் கூறிய டத்தோஶ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

பெர்கேசோவின் உதவியை பெற்றுக் கொண்ட திருமதி பிலோமினா டத்தோஶ்ரீ சரவணனுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஈப்போவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆடவர் ஒருவர் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த தேவசகாயம் 8 மாதகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மாதம் மரணமடைந்தார்.