
நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள்- டத்தோஸ்ரீ சரவணன்
81 total views, 2 views today
கோலாலம்பூர்-
புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு, இன்று நோன்பின் தொடக்கம். இன்னும் ஒரு மாத காலத்தில் புனித ரமலான் பெருநாளைக் கொண்டாட விருக்கிறோம். அதனை முன்னிட்டு இன்று அனைத்து முஸ்லீம் நண்பர்களும் நோன்பைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பார்கள்.

இன்று தொடக்கம் அடுத்த ஒரு மாத காலத்திற்கு எந்தத் தங்குத் தடையுமின்றி, உறவுகளோடு இனிதே நோன்பைக் கடைப்பிடிக்க அனைத்து முஸ்லீம் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஈகைத் திருநாளை முன்னிட்டு நோன்பைக் கடைப்பிடிப்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாகும். பசி, தாகம் மட்டுமின்றி தீய செயல்களைச் செய்யாதிருத்தலும், தான தருமங்கள் செய்வதும் நோன்பின் அடையாளமாகும்.
அனைத்து சமயங்களும், நல்ல குணங்களையும், நல்ல செயல்களையுமே கற்றுத் தருகின்றன. மனிதர்கள்தான் சில வேளைகளில் மதம் பிடித்தது போல் ஆகிறோம். அனைவரும் அவரவர் சமயத்தைக் கடைப்பிடித்து, பிறர் சமயத்தை மதித்து நடந்தால் உலகில் சமயத்தின் பேரில் பிரிவினை இருக்காது.
வள்ளலார் கூறிய பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பதைப்போல உன்னத எண்ணத்தோடு நோன்பை அனுசரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். முஸ்லீம் அன்பர்களுக்கு நோன்பின் தொடக்கம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று மஇகாவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.