
மெளனம் கலைவார்களா எதிர்க்கட்சியினர்?- டத்தோ டி.மோகன்
362 total views, 1 views today
ரா.தங்கமணி
கோலாலம்பூர்,அக்.20-
மித்ராவிடமிருந்து மானியம் பெற்றதாக மஇகா தலைவர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் எதிர்க்கட்சியினர், இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மித்ரா மானியம் முழுமையாக செலவிடப்படாமல் திரும்ப அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்ட்ட விவகாரம் தொடர்பில் வாய் திறக்காதது ஏன்? என்று மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் கேள்வி எழுப்பினார்.
ஒவ்வோர் ஆண்டும் மித்ராவுக்கு (பழையது செடிக்) வெ.100 மில்லியன் என கடந்த ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் வெ.500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெ.500 மில்லியனில் ஏறக்குறைய வெ.250 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்ட நிலையில் எஞ்சிய வெ.250 மில்லியன் அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு 3 காரணங்களை முன்வைக்கலாம்.
1. இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வெ.100 மில்லியனை செலவிட வேண்டும். இல்லையேல் திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்.
2. இந்த மானியத்தை பெறும் தரப்பினர் முறையான பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக ஒப்படைக்கப்படாமல் பிடித்து வைத்துக் கொள்ளப்படும்.
ஐ-சேனல் E-Paper-ஐ படிக்க கீழே கிளிக் செய்யவும்…
3. மானியம் பெற்றுக் கொண்ட தரப்பினர் ஒப்பந்தம்படி பயிற்சிகளை முழுமையாக முடிக்கவில்லையென்றால் அதற்கான எஞ்சிய பணத்தை மீண்டும் ஒப்படைத்து விட வேண்டும்.
இப்படி இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட மானியத்தில் வெ.250 மில்லியன் அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை கேள்வி எழுப்பாத எதிர்க்கட்சியினர், மஇகா தலைவர்களை குற்றஞ்சாட்டுவதிலேயே குறியாக உள்ளனர்.
இந்திய சமுதாயத்தின் மீது உண்மையிலே எதிர்க்கட்சியினர் அக்கறை கொண்டிருந்தால் இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்ப தங்களது மெளனத்தை கலைப்பார்களா? என்று டி.மோகன் வினவினார்.