
வருமானம் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் உதவித் திட்டங்களை வழங்குக- மகேந்திரன் கோரிக்கை
367 total views, 1 views today
கோலாலம்பூர்-
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பெரும்பாலான தொழில்துறைகள் முடக்கம் கண்ட நிலையில் அதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகள்தான்.
கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலானோர் உடம்புப்பிடி சேவையை மேற்கொண்டு வருகின்றன நிலையில் எம்சிஓ அமலாக்கத்தினால் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இத்தகையோருக்கான கூடுதல் உதவித் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று மலேசிய தர்மம் தலை காக்கும் இயக்கத்தின் தலைவர் மகேந்திரன் நாகலிங்கம் கூறினார்.
இந்த எம்சிஓ காலகட்டங்களில் வீட்டு வாடகை, அத்தியாவசிய செலவீனங்கள் உட்பட பல தேவைகளுக்கு போதிய வருமானம் இல்லாமல் பெரும் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சமூக நல உதவித் திட்டத்தின் வாயிலாக அரசாங்கம் 450 வெள்ளியை மாதந்தோறும் வழங்கி வந்தாலும் அது எங்களை போன்றோரின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை அறிந்து கூடுதல் உதவித் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று அண்மையில் உணவுக் கூடைகளை வழங்கும் நிகழ்வில் மாற்றுத் திறனாளியான மகேந்திரன் இவ்வாறு கூறினார்.
பிரிக்பீல்ட்ஸ் பார்வையற்றோர் கட்டடத்தில் நடைபெற்ற உணவுக் கூடைகளை வழங்கும் நிகழ்வில் 84 பேருக்கு உணவுக் கூடைகளும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. அதோடு இருவருக்கு சக்கர நாற்காலியும், ஒரு மாணவிக்கு கையடக்கப்பேசியும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தர்மகுமரன், தொழில் முனைவர் வினோத், உட்பட சிலர் கலந்து கொண்டனர்.