வீட்டை உயர்த்திட, நாட்டை உயர்த்திட, நாளை உருவாக்க, இன்று உழைத்திடும் உன்னதக் கரங்களே !

Business, Economy, Local, Malaysia, News, World, World Wide

 354 total views,  1 views today

கோலாலம்பூர் – 1 மே 2022

மே முதல் நாள், உலக உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் எளிதாகக் கைகூடிவிடவில்லை. பல போராட்டங்களுக்குப் பின் விளைந்தது.

மே நாள் வரலாறு

தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு, 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்தாக வேண்டிய நிலை கி.பி.,18ம் நுாற்றாண்டில் நிலவியது. முழுநேரமும் தொழிற்சாலையிலோ, வேலையிடத்திலோ இருந்தாக வேண்டும். குழந்தைகளை கொஞ்சவோ, குடும்பத்தைக் கவனிக்கவோ போதிய நேரம் இருக்காது; சம்பளமும் குறைவு.

இந்த நிலையை மாற்ற, உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஒரு நாளில், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கை எழுந்தது.

எட்டு மணிநேர வேலையை வலியுறுத்தி அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு போராடி வந்தது. இந்த அமைப்பு, அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தை, மே 1, 1886ல் அறைகூவல் விடுத்தது. இந்த அறைகூவலே, மே நாள் பிறப்பதற்கு காரணமாயிற்று.

அழைப்பை ஏற்று அமெரிக்காவில் தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோரில், 3.5 இலட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க பெருநிறுவனங்கள் தவித்தன. தொடர்வண்டி போக்குவரத்தும் முடங்கியது.

நிலக்கரி சுரங்கம், தொடர்வண்டி தொழில், கப்பல் கட்டும் தொழில் எனப் பல தரப்பு தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா, சிகாகோ நகர ஹேமார்க்கெட் சதுக்கத்தில்,
மே 4, 1886ல் தொழிலாளர்கள் திரண்டனர்; மாபெரும் பேரணி நடத்தினர். ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வதை வலியுறுத்தி முழங்கினர்.

அப்போது, கூட்டத்தின் நடுவே திடீர் என குண்டு வெடித்தது. பெரும் கலவரம் மூண்டது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது காவல்துறை. இதில், 11 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது.

இதையடுத்து, பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. கலவரத்தைத் துாண்டியதாக எழுத்தாளர்கள் உள்பட, ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதில் சிலரை, நவம்பர் 11, 1887 அன்று துாக்கிலிட்டனர். அவர்களது இறுதி ஊர்வலத்தில், இலட்சம் பேர் பங்கேற்றனர். அமெரிக்காவில் அது கறுப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், அனைத்துலகத் தொழிலாளர் மன்றம், ஜூலை 14, 1889ல் கூடியது.
இது, பொதுவுடமை இயக்க, இரண்டாவது உலக நாடுகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதில், பொதுவுடமை இயக்க முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரடெரிக் ஏங்கெல்ஸ் உட்பட, 18 நாடுகளைச் சேர்ந்த, 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம், எட்டு மணிநேர வேலையை வலியுறுத்தியது. இதுதான் மே முதல் நாளை உலக உழைப்பாளர் நாளாகக் கொண்டாட வழிசெய்துள்ளது.

நன்றி : தினமலர்

Leave a Reply